samedi 13 avril 2024

சிறப்புப் பாயிரம்

 

பாவலர்மணி சிவ. மணிவேலனார் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

அலைதவழ் புதுவை கலைதவழ் நகரின் 

நிலைபுகழ் வாணர்! நிறைமதி யாளர்!

உரைவளங் கண்ட ஒப்பில் அறிஞர்!

கரைவள ஊர்போல் கவிவளப் புலவர்!

அருந்தமிழ் மலையர் ஆ.சிவ லிங்கனார்

திருப்பெயர் காக்கும் தீந்தமிழ் மைந்தர்

சிவ.மணி வேலர் செய்த இந்நுால்

தவமணிக் கலனார் சாற்றிய வழியில்

விருத்த மாயிரம் வியன்பெயர் சூடிப்

பொருத்தம் பத்தும் பொலிய கண்டேன்!

குணகடல் கிழக்கே! குமரி தெற்கே!

இணைக்கடல் அரபி இமயம் தாமே

மேற்கும் வடக்கும் மேவிய எல்லையுள்

பூத்த பொழிலில் யாத்த விருத்தம்

மூத்த தமிழை ஏத்திப் போற்றும்!

தந்தை வாழ்வைச் சாற்றும் இவ்வேடு

விந்தை மேவ விழிகளைக் கவ்வும்!

பாட்டின் அரசன் பாரதி தாசன்

காட்டிய வழியில் தீட்டிய ஆக்கம்

சீர்சேர் வாழ்வைத் தேர்மேல் ஏற்றித்

தார்சேர் வாழ்வைத் தந்து தழைக்கும்!

வண்ணத் தமிழின் வளத்தை யளிக்கம்!

எண்ண மினிக்க இன்றேன் யளிக்கும்!

இரண்டா யிரத்திரு பத்து நான்கில்

திரண்ட அவையுள் விரித்த படையல்

பாவலர் அரங்கின் மாவளம் காட்டும்!

நாவளங் கூட்டும்! நன்னெறி சூட்டும்! 

மண்ணின் மாட்சி, பண்ணின் ஆட்சி,

பெண்ணின் மீட்சிப் பேசிக் களிக்கும்

விருத்தம் யாவும் விருந்தாய் இனிக்கும்!

நிருத்தச் சிவனின் திருவருள் திளைக்கும்!

வெற்றி கொடுக்கும்! பற்றுப் படைக்கும்!

கற்றிடக் கற்றிடக் காவியம் பிறக்கும்!

அன்னைத் தமிழின் அழகில் மயங்கிப்

பொன்னை யுருங்கிப் புனைந்த இந்நுால்

தண்மணி வேலரின் தமிழ்மணி மரபினை

மண்ணணி யாக்கி விண்ணொளி வீசுமே!

 

17.02.2024

வாழ்த்துக்கவிதை

தமிழ்க் கலாச்சார சங்கம் நடத்தும்

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

சிறந்தோங்க வாழ்த்துகிறேன்! 

 

புலிபறக்கும் மாமறவர் சோழர் தம்மின்

          புகழ்பறக்கும் வரலாற்றைப் பேசும் இந்நுால்

கிளிபறக்கும் அழகாக இன்ப மூட்டும்!

          கிளைபடைக்கும் பூக்களென மணமே கூட்டும்!

ஒளிபடைக்கும்! உயர்வளிக்கும்! உலகே போற்ற

          ஒண்டமிழின் மேன்மையினை எடுத்துக் காட்டும்!

வலிபடைக்கும் மெலிபடைக்கும் பாட்டின் மன்னன்

          வாழ்த்துகிறேன்! மாநாடு வெற்றி காணும்!

 

சோறளிக்கும் வளநிலத்துத் தஞ்சைக் கோயில்

          சோழர்களின் கலைகாக்கும்! தொன்மை சொல்லும்!

ஆறளிக்கும் வளமாக ஆய்வை யேந்தி

          அமுதளிக்கும் இம்மலரை அகமே கொள்வோம்!

ஏறளிக்கும் விருதேற்று வாழ்ந்த மண்ணின்

          எழிலளிக்கும் மாநாட்டை நடத்தி நன்றே

பேறளிக்கும் தமிழ்ச்சங்கம் வாழ்க! வாழ்க!!

          பெயர்பதித்த தொண்டர்கள் வாழ்க! வாழ்க!!

 

கல்லணையைக் கட்டிவைத்த கரிகால் சோழன்

          காலத்தைக் கோலத்தை ஓதும் இந்நுால்

சொல்லணையைக் கட்டிவைத்த மாட்சி யாகும்! 

          சுவையணையே இல்லாமல் பொங்கிப் பாயும்!

பல்லணையைக் கட்டிவைத்த நன்மை போன்று

          பன்னாட்டு மாநாடு! நற்றேன் கூடு!

நல்லணையைக் கட்டிவைத்த ஆட்சி யாக

          நலங்காணப் பாட்டரசன் வாழ்த்து கின்றேன்! [52]

 

12.04.2024

சாற்றுகவி

 

பாவலர்மணி வ. சண்முகம் இயற்றிய

விருத்தச்சோலை நுாலுக்குச்

சாற்றுகவி

 

பூவாய் மணக்கும் சீருடைய

         புலமை சேர்..வ. சண்முகனார்

நா..வாய் வீட்டில் தமிழன்னை

         நடன மாட யான்கண்டேன்!

பாவாய்ப் பொழிந்த இன்மழையில்

         படர்ந்த விருத்தச் சோலையிது!

கூவாய் குயிலே! இந்நுாலின்

         கோலம் உலகம் அறிந்திடவே!

 

அன்பே சுரக்கும் உளமுடைய

         அருமைச் சீர்..வ. சண்முகனார்

இன்பே சுரக்கும் வண்ணத்தில்

         இனிமை சுரக்கும் எண்ணத்தில்

நன்றே மரபு மணந்திடவே

         நவின்ற விருத்தச் சோலையிது!

குன்றே நின்ற தமிழ்க்கடவுள்

         கொடுத்த இந்நுால் புகழ்பெறுமே!

 

அகத்துள் தமிழே குடிகொண்ட

         அறிவின் கூர்..வ. சண்முகனார்

முகத்தில் சாந்தம் பூத்தாடும்!

         மொழிக்குள் சந்தம் கூத்தாடும்!

செகத்துள் தமிழின் நன்மரபில்

         செழித்த விருத்தச் சோலையிது!

இகத்துள் இந்நுால் சிறப்பெய்தி

         எங்கும் பரவ வாழ்த்துகிறேன்!

 

பாட்டின் அரசர் இடங்கற்ற

         பண்பின் வேர்..வ. சண்முகனார்

ஏட்டின் அரசர் இவரென்றே

         ஏத்திப் போற்றக் கவிசெய்தார்!

காட்டில் உள்ள கனியாவும்

         கமழும் விருத்தச் சோலையிது!

நாட்டில் கற்றோர் வாழ்த்திடுவார்!

         நானும் உரைத்தேன் பல்லாண்டு!

 

முழையூர் மைந்தர்! பாமணியார்!

         முழுமைச் சீர்..வ. சண்முகனார்!

இழையூர் தறிபோல் சொன்னுாற்றே

         இரவும் பகலும் கவிசெய்தார்!

மழையூர் பெற்ற வளமாக

         மலர்ந்த விருத்தச் சோலையிது!

கழையூர் உற்ற இனிப்பெல்லாம்

         காட்டும் இந்நுால் வாழியவே!

 

10.04.2024

 

சிறப்புப் பாயிரம்

 

பாவலர்மணி வ. சண்முகம் படைத்த

தேனமுத விருத்த நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

முழையூர் பிறந்த முத்தமிழ் வாணர்!

மழையூர் சோழன் மாளிகை சேர்ந்து

கற்றுத் தேர்ந்த கன்னல் பாவலர்!

பெற்றோர் வஞ்சி லிங்கப் பிள்ளை

அன்பகச் சரோசா! அறஞ்சேர் குடும்பம்!

பண்பகம் என்று பார்ப்போர் உரைப்பர்!

முகநுால் நட்பை அகமேல் பதித்து

மிகுநுால் வன்மை விளைந்த நாவலர்!

அடக்கம், அமைதி, ஆற்றல் ஓங்கி

நடக்கும் மறவர்! நற்றமிழ் உழவர்!

பற்றுடன் பாவலர் அரங்கில் பயின்று

பொற்புடன் பூத்த நற்றேன் அமுத

விருத்தம்! இளங்கோ, விந்தைக் கம்பன்,

திருமுறை யடியார் செப்பிய வழியில்

உலகே வாழ உயர்ந்த நெறிகளைக்

குலவும் தமிழின் கோல அணிகளைப்

பாட்டின் அரசன் பாரதி தாசன்

கேட்டதற் கிணைங்கித் தீட்டிய இந்நுால்

பாட்டு வளத்தைப் படிப்பவர்க் கூட்டும்!

காட்டு வளத்தைக் கவிகளில் காட்டும்!

மரபு தமிழின் மாட்சியைச் சூட்டும்!

உரவே கூட்டும்! உரிமையை மூட்டும்!

முக்கடல் சூழும்! முகமோ இமயம்!

எக்கடல் வெல்லும்? இன்றமிழ் ஆழம்

என்றே யுணர்ந்த இந்திய நாட்டில்

நன்றே தமிழின் நன்னெறி சூழ

முன்னைத் மொழிமேல் மோகங் கூடத்,

தன்னே ரில்லாத் தண்டமிழ் ஆள,

ஈரா யிரத்தை மூவெட்டு இணையும்

தீரா ஆசையில் திளைத்த காலம்

தண்முகங் கொண்ட சண்முகப் புலவர்

பண்முக மின்னப் படைத்தார் நுாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

13.01.2024